அரசுப் பள்ளியில் சேருவோருக்கு பரிசு: சேர்க்கையை அதிகரிக்க சொந்தப் பணத்தை வழங்கும் ஆசிரியர்கள்

தங்கள் பள்ளியில் சேரும் மாணவிகள் அனைவருக்கும் ரூ.500 மதிப்புள்ள அன்பளிப்பு பொருட்களை தங்கள் ஊதியத்தில் இருந்து தர புதுச்சேரி திலாசுப்பேட்டை அரசுப் பெண்கள் நடு நிலைப் பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.


புதுச்சேரி திலாசுப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. சமச்சீர் கல்வியும் சிபிஎஸ்இ பாடத்திட்டமும் உள்ளன. இலவச சீருடை, நூலக வசதி, அறிவியல் ஆய்வுக்கூடம், யோகா உள்ளிட்ட வசதியும் பள்ளியில் உள்ளன. எனினும் தற்போது 70 மாணவிகளே படிக்கின் றனர்.

வரும் கல்வியாண்டில் மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க இப்பள்ளி ஆசிரியர்கள் 10 பேரும்சேர்ந்து புதிய முயற்சியை எடுத்துள்ளனர். அதற்காக தங்கள் ஊதியத்தில் இருந்து நிதியும் ஒதுக்கியுள்ளனர்.பள்ளியின் வெளியே கரும்பலகையில் இதற்கான அறிவிப்பை எழுதியுள்ளனர்.அதில் "எங்கள் பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஜூன் மாதத்துக்குள் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் ரூ.500 மதிப்புள்ள பொருட்கள் அன்பளிப்பாக தரப்படும்’’ என குறிப்பிட்டு உள்ளனர்.

முதல் முயற்சி


இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) முருகவேல் கூறியதாவது: அரசுப் பள்ளியில் மாணவிகள் சேர்க்கையை அதிகரிக்க புது முடிவு எடுத்தோம். எங்கள் பள்ளியில் பணியாற்றும் 10 ஆசிரியர்களும் ஊதியத்தில் இருந்து நிதி ஒதுக்குகிறோம்.

1 முதல் 8-ம் வகுப்பு வரை சேரும் மாணவிகளுக்கு ரூ.500 மதிப்புள்ள புத்தகப் பை, நோட்டு, ஜாமிண்ட்ரிபாக்ஸ் வழங்க உள்ளோம். . முதல்முறையாக இம்முயற்சியை எடுத்துள்ளோம்.அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகமாக நடைபெற வேண்டும். எங்கள் பள்ளிக்கென்று பல சிறப்புகள் உண்டு.அண்மையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடத்திய கட்டுரைப் போட்டியில் இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து ரூ. 75 ஆயிரம் பரிசை எங்கள் பள்ளி மாணவி வென்றுள்ளார்" என்று ஆர்வமுடன் தெரிவித்தார்.

Comments