கார்பைட் கல் மாம்பழத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? அதிகாரிகள் சொன்ன விளக்கம்

தற்போது மாம்பழ சீசன் தொடங்கிவிட்டது. பழக்கடைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் மாம்பழங்கள், மக்களைக் கவர்ந்திழுத்து ஆசையோடு வாங்கத் தூண்டும். 



நீங்கள் வாங்கிச் செல்லும் மாம்பழங்கள் ரசாயனத்தில் பழுக்க வைக்கப்பட்டிருக்கலாம். இதுபோன்ற மாம்பழங்களை எப்படி கண்டுபிடிப்பது, இதுபோன்ற பழங்களைச் சாப்பிட்டால் உடலுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் உருவாகும் என்பதை  விவரிக்கிறது இந்த உஷார் ரிப்போர்ட். 

மாம்பழம் சாப்பிட்டால், சில சமயங்களில் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுவதுண்டு. ’மாம்பழம் பயங்கரமான சூடு. இதுல வெயில் வேற பின்னியெடுக்குது. அதான் ஒத்துக்கலை” என்று பேசிக்கொள்வதுண்டு. 

ஆனால், இது உண்மையான காரணம் அல்ல. பெரும்பாலும், கார்பைட் கற்கள்மூலம் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்களால்தான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, கார்பைட் கற்கள்மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களைக் கண்டுபிடித்தனர்.


பழ வியாபாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கும்பகோணம் சாரங்கபாணி தெற்கு விதியில் உள்ள குமார் என்பவருக்குச் சொந்தமான மாம்பழ குடோனில் இருந்து இவை வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. அங்கு சென்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, 2 டன் மாம்பழங்கள் ரசாயனக் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்தன. 

இவை பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி உரக் கிடங்கில் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது. கார்பைட் கல்மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை எப்படி கண்டுபிடிப்பது என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். ‘இதுபோன்ற மாம்பழங்களில் ஆங்காங்கே கருமை நிறம் இருக்கும். பாதி பழுத்தும், பாதி பழுக்காமலும் இருக்கும்” என்று தெரிவித்தார்கள்.

Comments