எந்த பள்ளியும் பள்ளிகள் மூடப்படாது: செங்கோட்டையன் உறுதி

''மாணவர் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், அன்னுாரில் நேற்று, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. 'நீட்' தேர்வில் அதிக அளவில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியர் வெற்றி பெற, பயிற்சி அளிக்கப்படுகிறது.

வெற்றி பெறுவர் : ஒன்பது கல்லுாரிகளில், உணவு, இருப்பிடம் இலவசமாக அளித்து, 3,145 மாணவ - மாணவியருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இம்முறை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து, அதிக மாணவ - மாணவியர், நீட் தேர்வில் வெற்றி பெறுவர்.வழக்கமாக பள்ளிகளில், பாடத்திட்டங்களை மாற்ற, இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்வர். 

ஆனால், இங்கு எட்டு மாதங்களுக்குள் புதிய பாடத்திட்டம் தயாரித்து, அச்சுக்கு கொண்டு வந்து உள்ளோம். இதன்படி, 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த கல்வியாண்டில், புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. ஆறாம் வகுப்புக்கு தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை, மத்திய அரசின் பாடத்திட்ட குழு பாராட்டியுள்ளது.

பல வண்ணம் : வழக்கமாக, 70 ஜி.எஸ்.எம்., காகிதத்தில் தயாரிப்பதற்கு பதில், இம்முறை, 80 ஜி.எஸ்.எம்., காகிதத்தில், தரமாக பல வண்ணத்தில் தயாரித்துள்ளோம்.

மேல்நிலை வகுப்புகளில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை நீக்குவது குறித்த சுற்றறிக்கை, 2015 முதல், ஒவ்வொரு ஆண்டும், அனுப்பப்படுகிறது. ஆனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Comments