ஆசிரியை -ஐ கத்தியால் குத்திய 9ஆம் வகுப்பு மாணவர் - ஆசிரியை மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூரில் ஆசிரியை -ஐ  கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய, 9ஆம் வகுப்பு மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர். 



திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் அனிஷ். இவர் அதே பகுதியில் உள்ள அம்பிகா என்ற ஆசிரியையிடம் டீயூஷன் படித்து வந்துள்ளார். மாணவனின் நடைமுறைகள் சரியில்லாத காரணத்தால், ஆசிரியர் அவரை டியூஷனுக்கு வரவேண்டாம் என்று நிறுத்தியுள்ளார். 

ஆனால் ஆசிரியர் அம்பிகா 5 சவரன் தங்கச் சங்கிலி அணிந்திருப்பதை, டியூஷன் படிக்கும் போதே மாணவர் நோட்டிமிட்டு வைத்துள்ளார். 


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், ஆசிரியர் அம்பிகாவின் வீட்டையே, அனிஷ் சுத்தி வந்துள்ளார். இதைக்கண்ட ஆசிரியரின் மகள் ஏன்? இந்தப் பக்கமே சுற்றித்திரிகிறாய் என்று சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வெளியே செல்ல, அம்பிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

இதையறிந்து வீட்டிற்குள் நுழைந்த அனிஷ், ஆசிரியரின் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவரை அம்பிகா தடுக்க முயன்றபோது, அனிஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கியுள்ளார். இதில் அம்பிகாவின் முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. 


இதையடுத்து அம்பிகா சத்தம் போட, பயத்தில் அனிஷ் தப்பி ஓடியுள்ளார். தற்போது காயமடைந்த அம்பிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தப்பி ஓடிய மாணவரை தேடி வருகின்றனர்.

Comments