மும்பை : 20 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்

நீண்ட காலமாக பள்ளிக்கு வராத 20 மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப் பட்டனர்.

மும்பை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பலர் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு சரியாக வருவதில்லை எனவும், பணியில் இருக்கும் சிலர் மாணவர்களுக்கு சரியாக பாடங்களை நடத்துவதில்லை எனவும் புகார்கள் வந்தது. இதையடுத்து மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் மாநகராட்சி பள்ளிகளில் சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது 16 ஆசிரியர்கள் 3 மாதம் முதல் 2 வருடம் வரை பள்ளிக்கு வராமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 4 பேர் பணிக்கு வந்தும் மாணவர்களுக்கு சரியாக பாடங்களை நடத்தாமல் அலட்சியமாக இருந்து உள்ளனர்.

இவர்கள் 20 பேரையும் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதுதவிர 50 ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு வராமல் இருப்பது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை பணியில் அலட்சியமாக இருந்ததாக 20 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு செல்லாமல் தனது வீட்டு அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் சென்று கையெழுத்து போட்டுவிட்டு வீட்டிற்கு சென்று இருப்பதை வழக்கமாக கொண்டிருந்ததை கண்டுபிடித்து உள்ளோம். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். 

Comments