பிளஸ் 1 வினாத்தாள் கடினம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் கமிட்டி

பிளஸ் 1 வினாத்தாள் கடினம் குறித்து ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி துறையில் நிபுணர் கமிட்டி அமைக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மாணவர்கள், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளவும், அதற்கேற்ப அவர்களை தயார்படுத்தவும், பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொது தேர்வில், மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையில், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கல்வியாளர்களும், மிகவும் தரமான வினாத்தாள்கள் என, பாராட்டியுள்ளனர்.ஆனால், மனப்பாட பயிற்சி மேற்கொண்ட மாணவர்கள், சிந்தித்து பதில் அளிக்க, சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், போனஸ்; கருணை மதிப்பெண் வேண்டும் என, பெற்றோர், மாணவர்கள் கோரியுள்ளனர்.இந்நிலையில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் ஆலோசனைப்படி, பிளஸ் 1 வினாத்தாளின் கடினத்தன்மை குறித்து ஆராய, நிபுணர் கமிட்டி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த கமிட்டியில், பேராசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், தேர்வுத்துறை அதிகாரிகள் இடம் பெறுவர் என, தெரிகிறது.பொது தேர்வுகள் முடிந்த பின், பிளஸ் 1 விடைத்தாள்கள், மே மாதம் திருத்தப்படும். 

அப்போது, மாணவர்கள் பெறும் அதிக பட்ச மதிப்பெண்ணை பொறுத்து, நிபுணர் கமிட்டி முடிவுகளை மேற்கொள்ளும். அதற்கு முன், எத்தனை கேள்விகள், மாணவர்களின் நுண்ணறிவை துாண்டின; எந்த கேள்வி களுக்கு பதில் எழுத, மாணவர்கள் திணறினர் என்பது உட்பட, பல்வேறு வகையில், ஆய்வு செய்யப்படும்.

பின், மாணவர்களில் பெரும்பாலானோர், சரியாக பதில் எழுதாத கேள்விகள் அடையாளம் காணப்பட்டு, அந்த கேள்விகளுக்கு, கருணை; போனஸ் அல்லது சமநிலை மதிப்பெண் வழங்க, முடிவு செய்யப்படும் என, பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments