குடிமைப் பணித் தேர்வு: நுழைவுச் சீட்டு நடைமுறையில் மாற்றம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் முதல் நிலைத் தேர்வுக்கு (பிரிலிமெனரி டெஸ்ட்) இம்முறை தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு நேரடியாக அனுப்பப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மாறாக, சம்பந்தப்பட்ட தேர்வர்கள், தங்களது நுழைவுச் சீட்டினை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதை அச்சுப் பிரதி (பிரிண்ட் அவுட்) எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட நாட்டின் உயரிய பணிகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வை மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. அதன்படி, மூன்று நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், அவற்றில் முதல் நிலைத் தேர்வுகள் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதுதொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை யுபிஎஸ்இ நிர்வாகம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

வழக்கமாக தேர்வர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு அனுப்பப்படும். ஆனால், இம்முறை அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இணையவழி நுழைவுச் சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் அனைவரது நுழைவுச் சீட்டும் www.upsc.gov.in  என்ற இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்து, அச்சுப் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை தேர்வெழுத வரும்போது உடன் எடுத்து வருவது அவசியம்.

நுழைவுச் சீட்டில் உள்ள புகைப்படம் தெளிவாக இல்லாதபட்சத்தில், ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் அசல் பிரதியை தேர்வர்கள் எடுத்து வர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Comments