சட்டப்பேரவை இன்று கூடுகிறது!




தமிழகச் சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் இன்று (மே 29) தொடங்குகிறது. இதில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 15ஆம் தேதி கூடியது. அன்றைய தினம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். மார்ச் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. 22ஆம் தேதி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் சட்டப்பேரவை கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். கூட்டத் தொடரின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்காகச் சட்டப்பேரவை இன்று கூடுகிறது. ஜூலை 9ஆம் தேதிவரை மொத்தம் 23 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று வனத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

இந்தக் கூட்டத்தில் குட்கா விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

Comments