குறட்டையை குறைக்கும் காதணி கருவி!


ஆழ்ந்த துாக்கத்தில் குறட்டை விடுவோருக்கு உதவ, 'ஸ்லீப் இயர் பட்' என்ற காதில் அணியும், 'இயர் போன்' கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ளனர்.
இதை அணிந்துகொண்டால், குறட்டை சத்தம் கேட்க ஆரம்பித்ததும், மெல்லிய ஒலியையும், அதிர்வையும் அந்தக் கருவி உண்டாக்கும்.
உடனே, குறட்டை விடுபவர் விழித்து, அவர் படுத்திருக்கும் தோரணை, தலையை வைத்திருக்கும் கோணம் போன்றவற்றை மாற்றிக் கொண்டு துாங்க உதவும்.
மேலும், இந்தக் கருவி எழுப்பும் ஒலியால், மூச்சுக் குழாயை சுற்றி உள்ள தொண்டை தசைகள் சுருங்கி விரிந்து கொடுப்பதால், குறட்டை விடுபவரால் இயல்பாக சுவாசிக்கவும் முடியும்.
ஸ்லீப் இயர் பட் எழுப்பும் ஒலி, அதை அணிந்திருப்பவரைத் தவிர, அருகில் படுத்து உறங்குபவருக்கு கேட்காது. இயர் பட்டின் ஒலி மற்றும் அதிர்வுகள் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை, ஒரு மொபைல் செயலி மூலம் திருத்திக் கொள்ளலாம்.
மேலும், ஒரு இரவில் எத்தனை முறை அவர் குறட்டை விட்டார் என்பதையும் மொபைல் செயலி பதிவு செய்யும்.
குறட்டை விடுபவர் இப்படி தன் குறட்டைப் பழக்கத்தை கண்காணிக்க ஆரம்பிக்கும்போது, குறட்டையின் அளவு குறையவும், ஏன் குறட்டை விடும் பழக்கமே கூட நிற்க வாய்ப்புள்ளதாக, ஸ்லீப் இயர் பட்டின் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் விலை, 6,500 ரூபாய். இந்த கருவிக்கு எந்த அளவு வரவேற்பு உள்ளது என்பதை அறிய, விரைவில், 'இன்டிகோகோ' இணையதளத்தில் அறிமுகப்படுத்த உள்ளனர் இதன் தயாரிப்பாளர்கள்.

Comments