கைரேகை பற்றிய சில தகவல்கள்!


இப்போது எங்கு சென்றாலும் கைவிரல் ரேகைதான் கேட்கிறார்கள். ஒரு சிம் வாங்குவதில் இருந்து அனைத்துக்கும் கைரேகை தேவைப்படுகிறது. நாம் கவனிக்காமல்விடும், ஆனால் மிக முக்கியமான விஷயம் கைரேகை. அந்த கைரேகை பற்றிய சில தகவல்கள்:

1. கைரேகை இல்லாமல் இருக்க முடியுமா? முடியும். மூன்று மரபணு பிரச்சினைகளால் கைரேகை உருவாகாமல் போகலாம். அவற்றின் பெயர்கள்: Naegeli–Franceschetti–Jadassohn syndrome (NFJS), Dermatopathia pigmentosa reticularis (DPR), and Adermatoglyphia!

2. கைரேகை அழியுமா? அழியாது. செங்கல் செய்வது போன்ற கடினமான வேலைகள் செய்பவர்களுக்குக் கைரேகை தேய்ந்துபோகலாம். ஆனால், சிறிது நாள்களில் அது தானாகவே சரியாகிவிடும்.

3. நம் அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே கைரேகை உருவாகிறது. நம் அசைவுகள், வயிற்றில் இருக்கும் இடம், இருக்கும் முறை, நீரின் தன்மை ஆகியவைதான் கைரேகையின் தனித்துவத்துக்கான காரணங்கள்.

4. இறந்துபோன ஒருவரின் உடல் வெகு நாள்கள் கண்டுபிடிக்கப்படாமல் போனால், அவர்களின் கையில் இருக்கும் தோல் கழன்றுவிடுமாம். அப்போது, அந்நபரை அடையாளம் காண்பதற்காக, அந்த கையின் தோலைக் கழற்றி எடுத்து வைத்துக்கொள்வார்களாம்.

5. உலகின் முதல் கைரேகை, குவைத் நாட்டில் ஓர் உடைந்துபோன மண்பானையில் கிடைத்திருக்கிறது. அதன் வயது, 7300 ஆண்டுகள்.

6. கீமோதெரபி சிகிச்சையின் போது கைரேகை அழிந்துபோகலாம்.

7. Identical twins எனப்படும் இரட்டையர்களின் DNAவை வைத்து அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. இருவருக்கும் ஒரே DNA தான் இருக்கும். ஆனால், அவர்கள் கைரேகை அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.

8. Dactyloscopy என்பது கைரேகை குறித்து செய்யும் ஆய்வுப் படிப்பின் பெயர்.

9. கோலா என்ற மிருகத்துக்கும் மனிதர்களைப் போன்ற கைரேகை இருக்கிறது. அதாவது, ஒரு கொலைச் சம்பவத்தில் கோலாவின் கைரேகை கிடைத்தால், அதை மனிதனுடையது என்றுதான் நினைப்பார்களாம். ஆனால், கோலாவிற்கு இரண்டு பெருவிரல்கள் இருப்பதால், சற்று யோசித்தால் கண்டுபிடித்துவிடலாம்!

10. நம் கையில் ரேகை இருப்பதால்தான் ஒரு பொருளைப் பிடிக்க முடிகிறது. இல்லையென்றால், பொருள்கள் வழுக்கிக்கொண்டு விழுந்துவிடும்.

Comments