பதவி, ஊதிய உயர்வை ரத்து செய்ய நிதித்துறை, 'கிடுக்கிப்பிடி' உத்தரவு!

பணியாளர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும். அவற்றால் ஏற்பட்ட கூடுதல் செலவை, அவர்களிடமிருந்து திரும்ப வசூலிக்க வேண்டும்' என, நிதித்துறை உத்தரவிட்டு உள்ளது.


தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ், 74 பொதுத்துறை நிறுவனங்கள், கம்பெனிகள் சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தற்போதைய நிலவரப்படி, 68 பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், 41 நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் மொத்தம், 2.91 லட்சம் பேர் பணியாளர்களாக உள்ளனர்.
இவர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இருப்பினும், பல நிறுவனங்களில், நிர்வாக நிலையில் நடக்கும் முறைகேடுகளால், சில அதிகாரிகளுக்கு, விதிகளை மீறி, கூடுதல் ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடுமையான இழப்பு ஏற்படுகிறது. இந்த முறைகேடுகளை சரி செய்யவும், மக்களின் வரி பணம் முறையாக செலவிடப்படுவதை உறுதி செய்யவும், சில நடவடிக்கைகளை எடுக்க, நிதித்துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, நிதித்துறையின் செலவுகள் பிரிவு செயலர், எம்.ஏ.சித்திக் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு:
* பொதுத்துறை நிறுவனங்களில், அதிகாரிகளின் ஊதியம், பதவி உயர்வால் ஏற்பட்ட செலவு வகையில், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பணியாளர் ஊதியம் என்ற வகையில் செலவிடப்பட்ட, கூடுதல் தொகைகளை திரும்ப வசூலிக்க வேண்டும்.
* தவறுதலாக வழங்கப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இதற்கான நிர்வாக ஒப்புதல்களை ஆராய்ந்து, ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணியாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அளித்து. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* இந்த உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்காத, மறுக்கும் அதிகாரிகள் மீது, நிர்வாக மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்
* இந்த விவகாரத்தில் சிக்கியோரை காப்பாற்றும் நோக்கில், அவர்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக குழுக்கள், சலுகை வழங்க கூடாது. நிர்வாக குழுக்களின் அடுத்த கூட்டத்தில், இந்த உத்தரவை தாக்கல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments