இந்தியாவை விஞ்சும் வங்கதேசம்!



வருகிற 2020ஆம் ஆண்டில் இந்தியாவை விடத் தனிநபர் வருவாயில் வங்கதேசம் முன்னிலையில் இருக்கும் என்று ஆய்வின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியிலும் சமூக மேம்பாட்டுக் காரணிகளிலும் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவையே விஞ்சும் அளவுக்கு வளர்ந்து வருகிறது. 2016ஆம் ஆண்டுடனான மூன்று ஆண்டுகளில் வங்கதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தற்போதைய டாலர் மதிப்பீட்டில் 12.9 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், இந்தியாவோ வெறும் 5.6 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கொண்டிருந்தது. இக்காலகட்டத்தில் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிகூட இந்தியாவை விட அதிகமாக (8.6%) இருந்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5.2 சதவிகிதமாகும்.

இதன் விளைவாக வங்கதேசத்தின் தனிநபர் வருவாய் டாலர் மதிப்பீட்டில் இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகமான வளர்ச்சியைப் பெற்று 1,355 டாலராக இருந்துள்ளது. அதாவது 2016ஆம் ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருவாய் 40 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் அந்த வளர்ச்சி வெறும் 14 சதவிகிதம் மட்டுமே. பாகிஸ்தான்கூட 21 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதே வேகத்தை வங்கதேசம் கொண்டிருந்தால் 2020ஆம் ஆண்டில் தனிநபர் வருவாயில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி வங்கதேசம் முன்னிலை பெறும். தெற்கு ஆசியாவிலேயே 2010 வரையிலான கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா 8.7 சதவிகித சராசரி வளர்ச்சியுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வங்கதேசத்தில் அந்த வளர்ச்சி 7.6 சதவிகிதமாகவும், பாகிஸ்தானில் 6.7 சதவிகிதமாகவும் இருந்தது. இந்த நிலையில் இந்தியா தனது இடத்தை வங்கதேசத்திடம் இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக உலக வங்கியின் அறிக்கை வாயிலாகத் தெரியவந்துள்ளது.

Comments