அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகு பள்ளிகளில் மீண்டும் சோதனை நடத்துவதா? முதல்வரின் தனி பிரிவில் புகார்

அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகும் தனியார் பள்ளிகளில் அரசு அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்துவதை தடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்க மாநில பொதுச்செயலாளர் வி.கே.பழனியப்பன் முதல்வரின் தனி பிரிவில் மனு அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பல்வேறு துறை அதிகாரிகள் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கல்வி, பொதுப்பணித்துறை, சுகாதாரம், மோட்டார் வாகனம், மின்சாரத்துறை அதிகாரிகள் இப்படி ஆய்வு நடத்துவது பள்ளிகள் நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

புதிய மாணவர் சேர்க்கை, மாணவர் தேர்ச்சி, மாற்று சான்றிதழ் வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில் இப்படி அதிகாரிகள் சோதனைகள் நடத்துவது பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த துறைகள் சார்ந்த அனுமதிகளை பள்ளிகள் பெற்றிருக்கின்றன. இப்போது அதன்மீது மீண்டும் சோதனைகள் நடத்துவது அரசு அளித்த சான்றுகளுக்கு உள்ள நம்பகத்தன்மையை சந்தேகிப்பதற்கு ஒப்பானதாகும். தமிழக முதல்வர் இதில் தலையிட்டு தனியார் பள்ளிகள் மீது மீண்டும் மீண்டும் சோதனை நடைமுறையை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments