1100 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஜியோ



இந்திய டெலிகாம் சந்தையை தொடர்ந்து பிராட்பேன்ட் சேவையை விரைவில் துவங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 2016 முதல் சோதனை துவங்கிய நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் அதிகாரப்பூர்வ சோதனைகள் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் குறைந்தளவு வாடிக்கையாளர்களுடன் துவங்கப்பட்டது.


சோதனையின் போது வாடிக்கையாளர்களுக்கு பிரீவியூ திட்டங்களின் கீழ் இலவச டேடடா வழங்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் துவக்க திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1100 ஜிபி டேட்டா வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ ஃபைபர் டூ ஹோம் சேவைகள் சென்னை, ஆமதாபாத், ஜாம்நகர், மும்பை மற்றும் புதுடெல்லி போன்ற நகரங்களில் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது.


விரைவில் வணிக ரீதியிலான வெளியீடு வரும் மாதங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ ஃபைபர் சேவை துவங்கப்பட இருப்பதாக தெரிவித்திருந்தார்.


இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ ஃபைபர் திட்டத்தில் முதற்கட்டமாக 100Mbps வேகத்தில் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இலவச டேட்டா நிறைவுற்றதும், வாடிக்கையாளர்கள் டாப்-அப் முறையில் ஒரே மாதத்தில் 25 முறை 40 ஜிபி டேட்டா பெற முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 1100 ஜிபி (1.1TB) இலவச டேட்டா பெற முடியும்.

கூடுதலாக வழங்கப்படும் 1000 ஜிபி டேட்டாவும் 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஜியோ ஃபைபர் சேவைகள் ஒரே கட்டமாக பொது பயன்பாடு மற்றும் வணிக ரீதியிலும் துவங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

முந்தைய பிரீவியூ சலுகைகளில் முதல் மூன்று மாதங்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுவதாக கூறப்பட்டது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு 100Mbps வேகத்தில் மாதம் 100 ஜிபி டேட்டா வழங்கப்பட்டதாகவும், இலவச டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

துவக்கத்தில் ஜியோ ஃபைபர் இணைப்புக்கு பாதுகாப்பு முன்பணமாக ரூ.4500 வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டணத்தில் ஜியோ ரவுட்டர் இன்ஸ்டால் செய்யப்படும் என்றும், இதே ரவுட்டர் கொண்டு IPTV மூலம் தொலைகாட்சி சேனல்களை பார்க்க முடியும் என ரிலையன்ஸ் ஜியோ தலைமை தி்ட்ட வல்லுநர் அனுஷ்மன் தாக்குர் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை இந்தியா முழுக்க சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் பரப்பளவில் ஆப்டிக் ஃபைபர் நெட்வொர்க்-களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவியிருப்பதால், ஃபைபர் சேவைகள் அதிவேகமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Comments