முதலில் மாட்டுக்கு.. இப்போது கழுதைக்கு ..: தேர்வு எழுத ஹால் டிக்கெட்

அரசுபணிக்கான தேர்வு எழுதும் அறையில் உங்களுடன் கழுதையும் தேர்வு எழுத வந்திருந்தால் எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள். இது நகைச்சுவை அல்ல.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுபோன்று வரிவசூலிக்கும் அதிகாரிகள் பணிக்கான அரசுத் தேர்வில், கழுதைக்கு ஹால் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ள விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரிவசூலிக்கும் அதிகாரிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் அரசு சார்பில் ஆன்-லைன் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்வு எழுத கழுதை ஒன்றுக்கு அரசு அதிகாரிகள் நுழைவுச்சீட்டு அனுப்பி இருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் அரசு தேர்வானணயம் தரப்பில் இந்த நுழைவுச் சீட்டு கழுதைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடுகளால் கழுதையின் புகைப்படம் இடம் பெற்றுவிட்டது என்றும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், பெயர் என்ற இடத்தில், ‘பிரவுன் நிற கழுதை’ என்ற பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டு, கழுதையின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

கழுதையின் புகைப்படமும், பெயரும் இடம் பெற்ற நுழைவுச்சீட்டு, பேஸ்புக், ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இது குறித்து மாநில அரசு தேர்வாணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாகிவிட்டனர். ஆனால், சமூக ஊடகங்களில் கழுதைக்கு நுழைவுச்சீட்டு கொடுத்த விஷயத்தை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.

‘கடுமையாக உழைத்து, படித்த கழுதைக்கு, வரிவசூல் அதிகாரி தேர்வுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு ஹால்டிக்கெட் வழங்கி இருக்கிறது’ என்று சிலரும், ‘ஏற்கனவே மாட்டுக்கு ஹால்டிக்கெட் வழங்கிய அரசு இப்போது கழுதைக்கு வழங்கி இருக்கிறது’ என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

‘நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் கழுதைதான் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்து பாஸ் செய்யப்போகிறது’ என்று ஒருசிலர் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர். இந்த கிண்டல் பதிவையடுத்து, இணையதளத்தில் இருந்து அந்த ஹால்டிக்கெட்டை தேர்வானையம் நீக்கியது.

இதேபோல கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அரசு தேர்வு ஒன்றில் பசுமாட்டுக்கு ஹால்டிக்கெட் வழங்கியது ஜம்மு மாநில அரசு என்பதுகுறிப்பிடத்தக்கது.

Comments