1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விலையை 20% உயர்த்த பாடநூல் கழகம் திட்டம்

1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்த தமிழ்நாடு அரசு பாட நூல் கழகம் முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

மற்ற வகுப்புகளுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் புத்தகங்களின் விலை உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு வரும் ஜூன் 1-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அப்போது 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகம் வழங்கப்பட உள்ளது. பாடப்புத்தகம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த நான்கு வகுப்புகளுக்கான பாடப்புத்தக விலையை 20% உயர்த்த பாட நூல் கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாராப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை உயர்வு அரசுப்பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் அவர்களுக்கு வழக்கம் போல் விலையில்லா புத்தகம் தமிழக அரசு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

விலை உயர்வு காரணம்

தரமான தாளில் பாடப்புத்தகங்கள் அச்சிடுவது, அதிக அளவில் வண்ணப்படங்களை சேர்ப்பது, புத்தகத்தின் முதல் மற்றும் பின் பக்க அட்டைகள் சேதம் அடையாமல் இருக்க லெமினேஷன் செய்வது உள்ளிட்ட காரணங்களால் தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது என்றும் இதனால் விலை உயர்த்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Comments