முதல்வரின் தனிப் பிரிவு மனுக்களுக்கு உரியபதில் அளிக்காத அலுவலர்களுக்கு 'நோட்டீஸ்'

தமிழக முதல்வரின் தனிப் பிரிவில் மனுக்களுக்கு, உரியபதில் அளிக்காதஅலுவலர்களுக்கு நோட்டீஸ் வழங்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டம் தொடங்கியதும், துறைகள் வாரிய நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.கூட்ட அரங்கில் உள்ள திரையில், ஒவ்வொரு துறைகளிலும் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்தும், மனுக்கள் தொடர்பாக அலுவலர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட பதில் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய ஆட்சியர் , குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு பல துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் முறையான பதில் அளிப்பதில்லை.குறிப்பாக, தங்கள் துறைக்கு தொடர்பில்லாத மனுவாக இருந்தாலும், அதனை சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்ட கோயில் குறித்துமுதல்வரின் தனிப் பிரிவுக்கு அளிக்கப்பட்ட மனுவுக்கு, பழனி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தங்களது துறைக்கு தொடர்பில்லாத மனு என்றும், அறநிலைத் துறைக்கு அனுப்ப வேண்டிய மனு எனவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நத்தம் பகுதியில் கறவை மாடு திட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவுக்கும் அதிகாரிகள், முறையான பதில் அளிக்கவில்லை.

இதனால் மனு அளிக்கும் பொதுமக்கள், அதிகாரிகள் தரப்பில் திருப்திகரமான பதில் தருவதில்லை என புகார் தெரிவிக்கின்றனர். எனவே, உரிய முறையில் பதில் அளிக்காத அலுவலர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்றார். ஆட்சியரின் இந்த அதிரடி அறிவிப்பால், கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு துறை அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

Comments