பாட புத்தகம் தயாரிப்பு : 28க்குள் முடிக்க கெடு

புதிய பாடத்திட்டத்தின் கீழ், அனைத்து வகுப்புகளுக்கும், பாட புத்தகங்கள் தயாரிப்பை, மார்ச், 28க்குள் முடிக்க, பள்ளிக்கல்வித்துறை, கெடு விதித்துள்ளது.தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

இதில், வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.புதிய பாடத்திட்டத்தின்படி, பல்வேறு கல்லுாரிகள் மற்றும் பிரபல பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், புதிய பாடப்புத்தகத்தை எழுதியுள்ளனர். அவற்றில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கான புத்தகங்கள், முழுமையாக சரிபார்க்கப்பட்டு, அச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒன்பது மற்றும் பிளஸ் 1 புத்தகங்களின் அம்சங்கள், படங்கள், க்யூ.ஆர்., கோடு போன்றவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல், க்யூ.ஆர்., கோடு அடிப்படையில், மொபைல் ஆப்பில், வீடியோ படங்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், பாட புத்தக ஆய்வு பணிகளை முழுமையாக முடித்து, மார்ச், 28க்குள் அச்சடிக்க வழங்குமாறு, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனால், இறுதி கட்டமாக, பிழை திருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Comments